ராஜ்நாத் சிங்கின் மூளைக் காய்ச்சல்!

Vinkmag ad

rajnathராஜ்நாத் சிங்கின் மூளைக் காய்ச்சல்!

மூளைக் காய்ச்சல் போன்ற கொடிய நோயான மதச்சார்பின்மை என்ற நோயால் காங்கிரஸ்

கட்சியினர்,கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.எங்களை மதவாதக் கட்சி எனக் குற்றம் சாட்டுவதன் மூலம்,மதச் சார்பின்மை, மதவாதம் என நாட்டை இரண்டு பிரிவாகத் துண்டாட முயற்சிக்கின்றனர்”

                                                      —பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் திருவாய் மலர்ந்ததாக தினமலர் செய்தி, சென்னை பதிப்பு,பக்கம் 09,(நாள்:25-06-2013).

 

ஒரு சிறிய வாக்கியத்தில் இருபெரும் விஷ வாருதி கொந்தளிப்பதைக் கவனியுங்கள்…

1.மதச்சார்பின்மையை ”மூளைக் காய்ச்சல்” என்கிறார்.

2.திரும்பவும் தேசம் (கருத்தியல் அடிப்படையிலாவது) துண்டாடப் படவேண்டும் என்ற தீய நோக்கத்தை அடுத்தவர் மேல் பழிபோடும் சாக்கில் வெளிப்படுத்துகிறார்.

 

இது அரசியல் போட்டியில் பேசப்பட்டுள்ள பேச்சு என்று மட்டும் கருதிவிட முடியாத ஆபத்தான பேச்சு.

 

இது குறித்துச் சாதாரண பொதுஜனமான நம்மால் சிலவற்றைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

 

பொதுஜனத்திற்கென்று சில பொதுவான அடிப்படை அரசியல் உறுதிப்பாடுகள் உண்டு.அவற்றின் அடிப்படையில்தான் இந்தியக் குடிமக்களின் வாழ்க்கை நடந்துகொண்டிருக்கிறது.  அவற்றுள்,”நம் நாட்டின் இறையாண்மை இந்திய அரசியல் சாசனத்தை அடிப்படையாகக் கொண்டது” என்பது முதன்மையானது

 

அந்த அரசியல் சாசனம் “””மதச்சார்பின்மை(secularism) குறித்து என்ன கூறுகிறது என்பதை  நாம் இப்போது மீள் பார்வை செய்வோம்:-

 

இந்திய அரசியல் சாசனம்,”நமக்கு நாமே” வழங்கிக் கொண்ட அரசியல் சாசனம்.

 

அதாவது நாடு சுதந்திரம் பெற்றபின்னர் இயற்றப்பட்ட இந்த சாசனம்,அன்றிருந்த இந்தியத் தலைவர்கள்,மக்கள் அனைவரும் மனமுவந்து அல்லது இதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாக (தங்களுக்காகவும் இனிவரும் சந்ததியினர் சார்பாகவும் கூட) ஏற்றுக்கொண்ட ஒன்று. இது இன்றுவரை பல திருத்தங்களைக் கண்டிருந்தாலும் அடிப்படையான எந்த விஷயத்திலும் எந்தவிதமான திருத்தமோ,மாற்றமோ பெறாத ஒன்று.அவ்வாறு செய்வது என்பது இப்போதுள்ள அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடக்கமுடியாத ஒன்றும் ஆகும்.

 

இன்றுள்ள இந்தியா, மாமன்னர் ஔரங்கஜீப் காலத்தில் இருந்த அளவுக்கு விரிந்தகன்று பரந்து ஒன்றுபடுத்தப்பட்டிருந்த பெரிய இந்தியாவாக அல்ல.

 

சரியாகச் சொல்லப் போனால் அவர் காலத்திற்குப் பின்னர் பல நாடுகளாகப் பிரிந்து கிடந்த பகுதிகளை- அதாவது ”பிரிட்டிஷ் இந்தியா”வையும் “இந்திய இந்தியாவையும்” (பிரிவினையோடு பிறந்த சுதந்திரத்திற்குப் பிறகு,)- ஒன்றுபடுத்தி,”இந்தியன் யூனியன்” என்ற அதிகாரபூர்வமான பெயரில் இருந்துவரும் ஒரு நாடாகும்.

 

உலகின் பெரிய நாடுகளில் ஒன்றாகவும், உலகில் எழுத்தில் வடிக்கப்பட்ட சட்டங்களிலேயே அளவில் பெரிதான அரசியல் சட்டத்தைப் பெற்றதாகவும் அந்த அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இயங்குவதாகவும் நம் நாடு இருந்துவருகிறது.

இந்தியா, இந்தியாவாக இருப்பதற்கு-அதாவது “இந்தியன் யூனியனாக” இருப்பதற்கு- அடிப்படையான விஷயங்களை யார் மறுத்தாலும்/ வெறுத்தாலும் அவர் குற்றவாளியாக- சட்டப்படியான தண்டனைக்கு உரியவராக ஆவார்.

 

நம்முடைய அரசியல் சட்டத்தின் பிரகடனங்களின்படி,

 

  1. “இந்தியா- இறையாண்மை,சோஷலிசம், மதச்சார்பின்மை,ஜனநாயகம் மற்றும் குடியாட்சியுள்ள நாடு”

 

  1. இந்திய அரசாங்கத்திற்கென்று தனியே மதமில்லை;இறையில்லத்தை இடித்துக் கொடுஞ்செயல் புரிந்து,ஒரு குற்றமும் செய்யாத மக்களை “துவேஷக் கொலைகள்” செய்து தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தாலும் கூட எந்தக் கட்சியின் மத்திய,மாநில அரசுகளும் “அரசாங்க மதமாக” எந்த மதத்தையும் வெளிப்படையாக-அதிகார பூர்வமாக- அறிவிக்கவே முடியாது.

 

  1.  அடிப்படை உரிமைகள் அனைத்தும் சட்டப்படி அனைவருக்கும் சமமாகவே அளிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சமயம் மற்றும் வழிபாட்டு உரிமைகளும் உள்ளன.எனவே மத அடிப்படையில் துவேஷம் பாராட்டுவது,அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது முதலியன சட்டத்திற்கு எதிரானவை.

 

  1. இந்தியாவில் சட்டப்படி வாக்களிக்கக் கூடிய வயது வந்த அனைவரின் பெயரும் ஒரே வாக்காளர் பட்டியலில்தான் இடம்பெற முடியுமே தவிர யாராலும் மதவாரியாகப் பிரித்துத் தனித்தனி வாக்காளர் பட்டியல்களை உருவாக்கவே முடியாது.

 

இவை அனைத்தையும் காக்கும் அரண்களில் ஒன்றாக இருப்பது நாட்டின் மதச்சார்பின்மை என்றால் அது மிகையல்ல. (The constitution stands for secular state of India and declares India as a “Sovereign, Socialist, Secular, Democratic, Republic.” There is no state-recognized religion. Several fundamental rights guarantee a freedom of worship and religion as well as outlaw discrimination on the ground of religion. There is only one electoral roll on which are borne the names of all those who are qualified to vote under the law…..Guaranteed by Art.14).எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவில் அரசியல் சட்ட அடிப்படையில் மட்டுமே ஆட்சி செய்வதுதான் அந்தக் கட்சியின் அரசியல் கடப்பாடாக இருக்கமுடியும்.அதாவது நாட்டின் மதச்சார்பின்மையை வெளிப்படையாக மறுத்துவிட்டு ஆட்சி நடத்திவிடமுடியாது.

 

இவ்வளவு அரசியல் முக்கியத்துவம் உள்ள மதச்சார்பின்மையை-இந்தியக் குடிமக்களுக்கு உலக நாடுகளுக்கிடையில் மதிப்பை ஏற்படுத்திவரும் மதச்சார்பின்மையை- இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமையின் அடிப்படையில் நடத்தப்படும் ஒர் அரசியல் கட்சியின் தலைவர், ”மூளைக் காய்ச்சல்என்று சொல்கிறார் என்றால் அதை அறியும் உண்மையான இந்தியக் குடிமகன் எவனும் அதிர்ச்சி அடையவே செய்வான்.

 

அரசியல் சட்டம் தெரிந்திருக்கக் கூடிய அரசியல் கட்சியின் தலைவர் ஒருவரே இப்படிச் சொல்கிறார் என்றால் அது அவருடைய மதவாதத்தைத்தானே அப்பட்டமாகக் காட்டுகிறது!

 

.ஆனால் அந்த உண்மையைச் சொன்னால் மட்டும் சொல்பவர்கள் மீது அந்த மனிதருக்குக் கோபம் வருகிறது.அந்தக் கோபத்தை அவர் சொன்னவர்கள் மீது காட்டி இருந்தால் கூட இதை நாம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

 

ஆனால்,அவருக்கு மதச் சார்பின்மை மீதே கோபம் வருகிறது!

மதச் சார்பிமையை,”மூளைக் காய்ச்சல்என்று வருணிக்கிறார்!!

 

எது மூளைக் காய்ச்சல்?

 

யாருக்கு மூளைக்காய்ச்சல்?

 

இந்திய மக்கள் சிந்திக்க மாட்டார்களா?

 

இவருடைய கட்சியின் மூத்த தலைவர் ஒருவருக்கு ’குறிப்பிட்ட சில செய்திகளை வசதியாக மறந்துவிடும்’ ஒருவகை மறதிநோய்-selective amnesia – இருப்பதை (மறதி நோய் மூளையில் ஏற்படுவது என்பதை நினைவு கூர்க) இவர்களுடைய நட்புக்கட்சியின் தலைமை ஒன்றே வெளிப்படையாகப் போட்டு உடைத்ததை நாடு இன்னும் மறந்துவிடவில்லை.

 

இப்போது இந்த ‘மஹானுபவர்’, ”மூளைக்காய்ச்சலை”ப் பற்றிப் பேசுகிறார்.

 

இவருடைய பேச்சிலிருந்து யாருக்கு மூளைக் காய்ச்சல்,யார் யாருடைய மூளை குறித்து அரசியல் அரங்கில் அதிகம் விமர்சிக்கப்படுகிறது என்பனவற்றைப் பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா?

 

மதச் சார்பின்மை பேசுவதன் மூலமாக “மதச் சார்பின்மை, மதவாதம் என நாட்டை இரண்டு பிரிவாகத் துண்டாடப்” பார்க்கிறார்களாம்!! ராஜ்நாத் சிங்கின் கற்பனை வளத்தைப் பாருங்கள்!

 

புவியியலின் அடிப்படையில் கூட நாடுகளை,மாநிலங்களைப் பிரிப்பது அரிதாக இருக்கும் இந்தக் காலத்தில் இவர் வேறு வகையான அச்சுறுத்தும் அரசியல் நடத்தப் பார்க்கிறார்! “நாட்டை இரண்டு பிரிவாகத் துண்டாடு”வதில் இவர்களுக்கு இருக்கும் ”கொலைவெறி”யின் வெளிப்பாடு அல்லவா இது?

 

மதச்சார்பின்மைநாட்டைத்துண்டாடும் என்றால் அது இந்திய யூனியன் அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருக்க முடியுமா?

 

ஒரே மந்தையைச் சேர்ந்த ஆடுகளை மோதவிட்டு ரத்தம் குடிக்க ஆசைப்படும் ஓநாய்களின் மனப்பான்மை,ஒழிந்துவிட்டது என்று நம்பிவிடாதீர்கள்! அது ஒளிந்திருக்கிறது-எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம் என்பதைப் புலப்படுத்தும் எச்சரிக்கை அல்லவா இது!

 

இது காய்ச்சல் கண்டவriன் பிதற்றல் என்று மட்டும் கருதிவிடக்கூடாது.மூளைக் காய்ச்சல் சம்பந்தப்பட்டவரின்ndhappattavrisambandhap ”ஸ்பெஷல்”பிதற்றல்.

 

பெரியார் ஈ.வே.ரா.வின் பாணியில் சொன்னால், இது வந்தவனை விட்டுவிட்டு அடுத்தவனைக் கொல்லும் காய்ச்சல்!

 

இந்தக் காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று நாடு எதிர்பார்க்கிறது.

—ஏம்பல் தஜம்முல் முகம்மது.

newlightpdkt@gmail.com

 

 

 

News

Read Previous

பதிவுத் தபால், பார்சல், மணியார்டர் வாங்குவதற்கு புதிய நடைமுறை அமல்

Read Next

எங்கே அமைதி ………..? ( டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *