ஓமந்தூரார் நினைவு தினம் – ஆகஸ்ட் 25
ஓமந்தூர்.
திண்டிவனம் – புதுவை சாலையில் 13ஆவது கி.மீ.இல் அமைந்துள்ள இவ்வூர் தமிழக அரசியல் வரலாற்றில் பிரிக்கவொண்ணா ஓர் ஊராகும்.
ஆம், சுதந்திர இந்தியாவில் சென்னை கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல் முதல்வர்-ஓமந்தூரார் என்றும், ஓ.பி.ஆர் என்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்படும், ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியாரின் பிறப்பிடம் இதுதான்.
சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஓமந்தூரார்.
1912 முதலே இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டார். 1930இல் தென்னார்க்காடு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஓமந்தூரார். விழுப்புரம் அருகே சிறுவந்தாடு கிராமத்தில் காந்தி ஆசிரமம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார்.
ஆங்கிலேய அரசின் தடைகளை மீறி தென்னார்க்காடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் மாநாடுகளை நடத்தினார். இம்மாநாடுகளில் பண்டித அசலாம்பிகை அம்மையார், பாபு ராஜேந்திர பிரசாத், தி ஹிந்து ரங்கசாமி ஐயங்கார், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா உள்ளிட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.
1930இல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்துக்கு தொண்டர்களை அனுப்பியக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 6 மாத சிறை தண்டணை விதிக்கப் பெற்றார். இதுபோல் பலமுறை சிறைவாசத்தை அனுபவித்தார் ஓமந்தூரார்.
1938இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பை ஏற்றார்.
23.3.1947 முதல் 6.4.1949 வரை ஓமந்தூரார் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தார்.
இவரது ஆட்சியின்போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை முறைப்படுத்தும் சட்டம், ஜமீன்தாரி இனாம் ஒழிப்புமுறை, கோயில்களில் தேவதாசி முறை ஒழிப்பு, கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மற்றும் பூரண மதுவிலக்கு ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
மேலும், சென்னை மாகாண அரசின் சின்னமாக திருவில்லிப்புத்தூர் கோபுரம் அறிவிக்கப்பட்டது. இந்திய மருத்துவம் வளர உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. தமிழ் வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்பட்டது. பாரதியார் பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.தேசிய கவி இராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.
காந்தியம் மற்றும் வடலூர் வள்ளலாரின் கொள்கைகளில் பெரும் ஈடுபாடு கொண்டவர் ஓமந்தூரார்.
விழுப்புரம் மாவட்டம் மழவந்தாங்களில் கஸ்தூர்பா தொழு நோய் நிவாரண நிலையத்தைத் தொடங்கிய இவர், வடலூரில் வள்ளலார் குருகுல உயர்நிலைப் பள்ளியையும் தொடங்கினார்.
1.2.1895இல் பிறந்த இவர் 25.8.1970இல் காலமானார்.
சென்னையிலுள்ள அரசினர் தோட்டத்துக்கு ஓமந்தூரார் அரசினர்த் தோட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரது நினைவைப் போற்றும் வகையில் மத்திய அரசு தபால் தலை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
2000ஆம் ஆண்டின் இறுதியில் ஓமந்தூர் கிராமத்துக்கு நான் சென்றிருந்தேன். முன்னாள் முதல்வர் ஒருவர் வாழ்ந்ததற்கான எந்தச் சுவடும் அங்கில்லை. கற்குவியல் ஒன்றைக் காட்டி, இங்குதான் அவர் வீடு இருந்தது என்றனர்.
இதனைத் தொடர்ந்து 9.11.2000 தேதியிட்ட குமுதம் இதழில், ‘முதல்’வரின் கிராமத்துக்கு முகவரி கொடுங்கள் எனும் தலைப்பிலான, என்னுடையக் கட்டுரை ஸ்பெஷல் ரிப்போர்ட்டாக பிரசுரமானது.
கடந்த 2013 பிப்ரவரியில் ஓமந்தூர் கிராமத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆருக்கு அழகிய மணிமண்டபம் திறக்கப்பட்டது.