எண்ணமும், எழுத்தும் உயர்வைத் தரும் !

Vinkmag ad

எண்ணமும், எழுத்தும் உயர்வைத் தரும் !

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச்,டி; ஐ.பீ.எஸ்.(ஓ )

 

நம்மிடையே நன்கு கற்றவர்கள், பட்டம் பெற்றவர்கள் மற்றும் பணக்கார குடும்பத்தில் பிறந்த தனவான்கள் தான் எழுத்தாளர்கள் ஆகலாம் என்ற தவறான எண்ணங்கள் உள்ளன. ஒரு நபர் நன்றாக பாடவேண்டுமென்றால், சங்கீத வித்வானிடமும்,  ஒரு ஓவியராகவோ அல்லது சிற்பியாகவோ ஆகவேண்டுமென்றால் அந்தந்த துறைகளைச் சார்ந்தவர்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் ஒரு எழுத்தாளன் அப்படி பயிற்சியின் மூலம் உருவாக முடியாது. அவன் சுயமாக தனக்குள் உருவாக வேண்டும். அதற்கு மாறாக கட்டுமான தொழிலாளர்கள் முதல் தெரு ஓரம் டீ, காஃபி கடை வைத்து தொழில் செய்யும் தொழிலாளர்களும் புத்தகம் எழுதி புகழ் அடையலாம் என்று சில உண்மை சம்பவங்களை கொண்டு இந்த கட்டுரையை  எழுதி உள்ளேன்.

கேரள மாநிலம் கண்ணனுரைச் சார்ந்த ஷபி சேரமாவிலவி என்ற முஸ்லிம் வறுமையின் காரணமாக பெங்களூர் வந்து கிடைக்கும் சில கூலி வேலைகளை செய்து வயிற்று பசியினை போக்கி வந்தார். அப்போது அவர் தமிழ்நாட்டினைச் சார்ந்த தொழிலாளர்களுடன் தங்க நேர்ந்தது.   அவர்கள் பேசும் கன்னித் தமிழ் கண்டு அதனைக் கற்று தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் உந்த தமிழ் பத்திரிக்கைகள், பின்பு சிறு, சிறு புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தார். பின்பு நல்ல சிறு கதைகளை கொஞ்சும் மலையாளத்தில் மொழி பெயர்த்து எழுதினால் என்ன என்று யோசித்தார். அதன்படியே சில தமிழ் கதைகளை மலையாளத்தில் மொழி பெயர்த்து சிறு சிறு கட்டுரைகளாக எழுதி அதனை மலையாள பத்திரிக்கைகளுக்கு அனுப்பி, அதுவும் பிரசுரமாகி, அவர் புகழ் தெரிய ஆரம்பித்தது. அப்படி எழுதிய கட்டுரைகளுக்கு மூன்று பரிசுகளையும் பெற்றது ஒரு தூண்டு கோலாக அமைந்தது. உடனே சாகித்திய அகாடமி தழிழ் புத்தகத்திற்காக பரிசு பெற்ற பெருமாள் முருகன் புத்தகத்தினை மலையாளத்தில் மொழி பெயர்த்ததோடு அல்லாமல் பெருமாள் முருகனாலேயே பாராட்டுப் பெற்றதினை பெருமையாகக் கருதுகிறார். அதன் பின்பு தோப்பில் முகமது அவர்களின் புத்தகத்தினையும் மொழி பெயர்த்துள்ளார். பல பாராட்டுக்கள் மற்றும் பரிசுகள் பெற்றாலும் நிரந்தரமான வேலை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று மனந்தளராது கட்டிடவேலையினையே செய்து கொண்டும் புத்தகங்கள் மொழி பெயர்த்துக் கொண்டு இருக்கின்றார் என்று நினைக்கும் போது அவர் மன உறுதியினை பாராட்டாமல் இருக்க முடியவில்லைதானே !

 

போலீசின் மீது இருந்த கோபம் ஒரு இளைஞரை புகழ் மிக்க எழுத்தாளராக்கியது என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதா, அவர் யார் என்று பார்க்கலாம்.

கோவை மாவட்டத்தினைச் சார்ந்த சந்திரகுமார் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக வீட்டினை விட்டு சில சக மாணவர்களுடன் வெளியேறி, கள்ள ரயில் ஏறி  குண்டூர் ரயில்வே ஸ்டேஷனலில் இறங்கியுள்ளார். அங்கு ரயில்வே போலீஸால் பிடிபட்டு பதிமூன்று நாட்கள் விசாரணையின்றி லாக்கப்பில் அடைக்கப் பட்டுள்ளார். அப்போது செய்யாத சில குற்றங்களை ஒத்துக் கொள்ளுங்கள் என்று கொடுமைப் படுத்தப் பட்டு அவர்களை ஒப்புக் கொள்ளச் சொல்லி ரிமாண்டிற்கு அனுப்பப் பட்டுள்ளார். ஐந்து  மாத ஜெயில் தண்டனையும் அனுபவித்து பின்பு நீதியரசர் அவர்கள் ஒன்றுமறியாதவர்கள் என்று அறிந்து விடுதலை செய்யப் பட்டார். சாரியார் ஜெயிலில் இருந்தபோது சிறந்த எழுத்தாளர்களான பகத் சிங் , ஹென்றி சாரியார் போன்ற புத்தகங்களை படித்து புத்தகம் படிக்கும் ஆர்வத்தினை ஏற்படுத்திக் கொண்டார். 1984 ம் ஆண்டு திரும்பிய பின்பு ஆட்டோ ஓட்டி வருகிறார். ஆனால் காவல் துறை மீது இருந்த கோபமும், அவர்களால் ஏற்பட்ட அவமானமும் ஒரு புத்தகமாக தமிழில் ‘லாக்கப் ‘என்று பெயரிட்டு வெளியிட்டார். அந்த கதைதான் ‘விசாரனை ‘என்ற தமிழ் படமாக வெளி வந்து 2017 ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டது என்றால் ஆச்சரியமில்லையா ? ஆனால் தனது எழுத்துப் பணியினையும் வயிறு கழுவ ஆட்டோ ஓட்டுதலையும் இன்றும்  விடவில்லை. சந்திரகுமார் சொல்லும்போது, படிப்பவர் மனம் கவரவே தான் தொடர்ந்து எழுதுவதாக’ சொல்லும்போது அவரைப் பார்த்து புகழாமல் இருக்க முடியவில்லைதானே ! 

சந்திரகுமாரைப் போலவே மஹாராஷ்டிராவினைச் சார்ந்த லக்ஷ்மான் ராவ் என்பவர் பத்தாவது வரைப் படித்தவர். பள்ளி மாணவ பருவத்திலேயே ஹிந்தி எழுத்தாளர் ‘குலசன் நந்தர்’ போல எழுத வேண்டும் என்று ஆர்வமுள்ளவர். அதன் ஆர்வம் உந்த டெல்லி வந்து பல சிறு, சிறு வேலைகளை செய்து வாழ்க்கையினை ஓட்டி விட்டு ஹிந்தி பவன் வாசலிலேயே நடைபாதையில் ஒரு டீ கடையினை தரையில் அமர்ந்து துவங்க ஆரம்பித்தார். அப்போது வியாபாரத்திற்கிடையிலேயே ‘நயி துணியானி , நயி கஹானி’ என்ற ஹிந்தி புத்தகத்தினை  1979 ம் ஆண்டு எழுதினார். அதனை வெளியிட பதிப்பாளர்கள் கட்டிடங்களுக்கு கஜினி முகமது போன்று படையெடுத்தார். எடுத்த எடுப்பிலேயே அவர் எழுதிய நாவலை பற்றிக் கேட்காமல் அவர் செய்யும் தொழிலையும், படித்த படிப்பையும் கேட்டுவிட்டு அவரைப் புறக்கணித்தனர். வெகுண்டெழுந்த அவர் துவழவில்லை மாறாக அவரே சொற்ப வருமானத்தினிடையே புத்தகமாக வெளியிட்டார்.

தனது விடாத முயற்சியால் தனது 50 வது வயதில் பி.ஏ.பட்டமும், எம்.ஏ. பட்டத்தினை 60 வயதில் பெற்றார். இதுவரை 20 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். ஆனாலும் தனது ரோட்டோர டீக் கதையினை விடவில்லை. ஏனென்றால் அவருக்கு வாழ்வு கொடுத்ததே அந்த வரப்பிரசாதம் தான்  என்று நம்புகிறார்.

மேற்கு வங்கத்தினைச் சார்ந்த ‘பேபி ஹால்டர்’ வாழ்வு சோகமோ சோகம் நிறைந்தது. குடிகார தந்தையின்  கொடுமையினால் தனது தாயார் அவரையும், அவருடைய சிறு தங்கையையும் கணவரிடம் விட்டு விட்டு கண் காணாத தூரத்திற்கு சென்று விட்டார். குடிகார தந்தைக்கு தினமும் குடிக்க காசுக்கு ஆசைப் பட்டு ஹால்டருக்கு 12 வயதாக இருக்கும் போது  ஒரு வயதான முதியவருக்கு திருமணமும் செய்து விட்டார். புகுந்த வீட்டில் ஏழாத கணவரும், அவருடைய குடும்பத்தினரும் கொடுமைப் படுத்தியதினால் வாழ்க்கையே இருண்டு விட்டது போன்ற அதிர்ச்சியில் தள்ளப் பட்டார். சிறைவாசம் போன்று அமைந்த வாழ்க்கையினை விட்டு வெளியேறி ஹரியானா மாநிலம் குறுகிராம் என்ற இடத்தில் ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அங்குள்ள பத்திரிக்கைகள் மற்றும் புத்தகங்களை ஓய்வு நேரங்களில் படிக்க ஆரம்பித்தார். அதுவும் வங்காள எழுத்தாளர்கள் ரவீந்தர் நாத், காசி நஸ்ருல் இஸ்லாம், பங்கின் சந்ர சாட்டர்ஜி போன்றவர்களின் நாவல்களை விரும்பி படித்தார். வீட்டின் உரிமையாளர் கொடுத்த ஆர்வத்தில் தானும் அவர்களைப் போல் எழுதினால் என்ன என்று யோசித்து பின்பு தனக்கு வாழ்வில் நடந்த சோகங்களை ஒருங்கிணைத்து, ‘ஆலோ அந்தாரி’ என்ற நூலை எழுதி அது பிற்காலத்தில் ‘a life less ordinary ‘ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிரபலமானார். அதோடு விடவில்லை, மும்பை, கல்கத்தா நகரங்களில் பாலின தொழிலாளர்களை நல்வழிப் படுத்த அரசு சாரா அமைப்பையும் நிறுவி அவர்களையும் நல்வழிப் படுத்தி, அவர்கள் குழந்தைகள் பள்ளி செல்லவும் வழிவகைகள் செய்து வருவதோடு தன் எழுத்து ஆரவத்தினையும் விடவில்லை என்றால் பாருங்களேன்.

சைக்கிள் ரிக்ஸா இழுத்துக் கொண்டே புத்தகம் எழுதும் பஞ்சாபி மாநிலம் அம்ரிஸ்டர் நகரினைச் சார்ந்த ரன்பீர்சிங்கும் புத்தகம் எழுதி பிரபலமாகியுள்ளார் என்று கீழேகாணலாம்.

ரன்பிர் சிங் சிறு வயது முதற்கொண்டே புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். அவருடைய தந்தை ஒரு ரிக்ஸா ஓட்டும் தொழிலாளி அதனால் குடும்ப வறுமை தந்தையினைப் போன்று அவரும் குடும்ப சூழ் நிலையில் ரிக்ஸா ஓட்ட வேண்டியதானது. இருந்தாலும் பழைய பத்திரிக்கைகள், கீழே கிடைக்கும் பழைய புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் அவரை விடவில்லை. ஒரு தடவை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில பிரபலங்களை அந்த தொலைக்காட்சியில் அறிமுகப் படுத்தி இவர்கள் தான் சீக்கிய கோட்பாடுகளை தாங்கிப் பிடிப்பவர்கள்’ என்று காட்டப் பட்டதினைப் பார்த்து  கொதித்தெழுந்த ரன்பிர் சிங் அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, ‘சீக்கிய மதத்தினைச் சார்ந்த ஒவ்வொருவரும் மத கோட்பாடுகளை காப்பவர்கள் தான்’ என்று நீண்ட ஒரு கடிதத்தினை எழுதினார். அதனை அந்த தொலைக்காட்சி நிறுவனமும் வெளியிட்டிதுடன் தான் தாமதம் அவருக்கு தொலைக் கட்சியிலே பல பாராட்டுகள் குவிந்து பிரபலமானார். அவர் ரிக்சாவில் பயணம் செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினர் சொல்லும் கதைகளை வைத்து, ‘ரிக்ஸா டே ஷலதி சிந்தகி’ என்று வெளியிட்டார். அவர் இன்றும் தனது சைக்கிள் ரிக்ஸா ஓட்டும் தொழிலை விடவில்லையாம்.

எழுத்தாளர்கள் என்பது ஒரு தனி வரம். அந்த வரம் பெற்றவர்கள் கடின உழைப்புக்கு அஞ்சக் கூடாது. அது ஒரு வேலை என்று நினைக்காது ஒரு வரமாய் நினைத்து செயல்படவேண்டும். நிறைய படிப்பதும், சமுதாயத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளையும், அவலங்களையும் உற்று பார்த்து அதற்கு தீர்வு காணும் வகையில் படைப்புகளை எழுதுவதும் ஒரு த னிக் கலை. நான் காவல் துறையில் ஓய்வு பெற்ற 13 வருடத்திற்குள் மூன்று ஆங்கில புத்தகங்களையும், ஏழு தமிழ் புத்தகங்களையும் எழுதியுள்ளேன். பணத்திற்கும், புகழுக்குமல்ல. மாறாக சமுதாயத்தில் அன்றாட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன். அது எனக்கு திருப்தி தருகிறது. அதனைப் படித்த சிலர் உங்கள் புத்தகம் சிறப்பாக இருக்கிறது என்று கூறும் பொது மன நிறைவு பெறுகிறேன். அதுபோன்று ஆர்வமுள்ள நீங்களும் எழுதக்கூடாது?

உங்களிடையேயும் புத்தகம் எழுதும் ஆர்வமுள்ளவர்கள் நிறையபேர் உள்ளனர். ஆனால் தொடங்க தான் தைரியம் வருவதில்லை. அது போன்றவர்களை கண்டறிந்து ஊக்கம் கொடுத்தால் யார் கண்டது அவர்களுடைய புத்தகமும், கட்டுரைகளும் ஒரு நாள் பிரசுரிக்கப் படலாம் யார் கண்டது.

 

News

Read Previous

கமல் ரஜனி கூட்டணி

Read Next

நான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *