உடலிலுள்ள குறைகளை…!
இன்றைய சிந்தனை ( 05.09.20 )
……………………………………………………
உடலிலுள்ள குறைகளை…!
……………………………………………..
உடலில் சிறு குறைகளை உடையவர்களை இப்போது மாற்றுத் திறனாளிகள் என்று தான் அழைக்கிறோம். அது தான் உண்மை…
பொதுவாக உடலில் இருக்கும் குறை என்பது மனதில் உறுதி உடையவர்களை பாதிப்பது இல்லை.
இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் மாறுபாடுகள் நிறைந்தவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை…
மனிதனும் அது போலத்தான். ஒவ்வொருவரும் மற்றவர்களில் இருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறுபடுகின்றனர்…
குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவர் உலகையே வெறுத்துப் போய் பார்க்கிறான்…
அதை உடைத்து எழுபவன் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான்…
உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் அரும் பெரும் சாதனைகள் பல என்றே சொல்லலாம்.
தங்கள் உடலிலுள்ள குறைகளை துச்சமாய் மிதித்து, வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் எதிர்நீச்சல் அடித்து உலகின் பார்வையை தங்கள் மீது திருப்பிய சாதனை படைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்…
ஆம் நண்பர்களே…!
உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், சாதிக்க வேண்டும் எனும் தணியாத தாகம் இருப்பவர்களுக்கு உடலில் இருக்கும் குறை ஒரு பொருட்டே அல்ல…!
இவர்கள் மட்டுமல்ல!, இவர்கள் போல பலரும் தங்கள் உடல் உறுப்புகள் பழுதுபட்டு இருந்தாலும் தங்களின் உள்ளம் உறுதியால் பல சோதனைகளை சாதனைகளாக மாற்றியுள்ளனர்…!!
உடலிலிருக்கும் ஒவ்வொரு நரம்பிலும் நம்பிக்கை வேரூன்றியிருக்க வேண்டும். உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என நினைக்கும்போது திறமைகள் உள்ளுக்குள் ஊற்றெடுக்கும்…!!!
ஆம்!, மனம் திடமாய் இருந்தால் போதும் செவ்வாய் கிரகத்திற்கே சுயமி (செல்ஃபி) எடுக்கச் செல்லலாம்…!
-உடுமலை சு. தண்டபாணி