இணையப் பயன்பாட்டை மேம்படுத்த…..

Vinkmag ad
இணையப் பயன்பாட்டை மேம்படுத்த.. 
பேராசிரியர் கே. ராஜு

பல ஆண்டுகளுக்கு முன், இணையப் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிக்கும் வர்த்தக நோக்குடன் உலக அளவில் கிளைகளைப் பரப்பியிருந்த ஒரு தகவல் தொழில்நட்ப நிறுவனம் கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் சேரிகளுக்கும் இலவச வைஃபை போன்ற வசதிகளைச் செய்துகொடுக்க முன்வந்தது.

சில ஆண்டுகளுக்குப் பின், சில சுவாரசியமான பயன்பாடுகள் புழக்கத்திற்கு வந்திருந்ததை நிறுவனம் கவனித்தது. இலவச இணைய வசதி இருப்பதைப் பயன்படுத்திக் கொண்ட வர்த்தக ஆர்வம் மிக்க சிலர் ஒரு சிறிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு ரேஷன் அட்டை, வீட்டுக்குத் தண்ணீர் இணைப்பு போன்ற அரசு சேவைகளுக்குரிய விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொடுப்பது, சிடிக்களில் சினிமாவைத் தரவிறக்கம் செய்து தருவது போன்ற சில சேவைகளில் இறங்கியிருந்தனர். புதிய புதிய முறைகளில் இணைய வசதியைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் வழியை அவர்கள் கண்டுபிடித்திருந்தனர். அதே சமயம், அந்த சேவை சாதாரண மக்களுக்குப் பயன்தரக்கூடியதாகவும் இருந்தது. ஆபாச வீடியோக்களைப் பரவலாக்குவது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு மனிதமனங்களைக் குப்பைக் கிடங்குகளாக்க சிலர் இணைய வசதியைப் பயன்படுத்திய போதிலும் கூட, பெரும்பாலான சேவைகள் ஆக்கபூர்வமான முறையில் மக்களுக்குப் பயன்படும் விதத்திலேயே இருந்தன. அதுவரை அரசின் சேவைகளைப் பெற சில தரகர்களை மட்டுமே நம்பியிருந்த மக்கள் அந்த அவல நிலையிலிருந்து விடுதலை பெற்றனர்.
உண்மையில், இப்படிப்பட்ட சேவைகள் இணைய சேவைப் பயன்பாடுகளை பரப்பியே ஆகவேண்டிய கட்டாயத்தை அரசுக்கு ஏற்படுத்தின. விளைவாக, இணையம் மூலமாக அறிக்கை அளிப்பது, வரி கட்டுவது, மின்சார பில் கட்டுவது போன்ற சேவைகளை அளிக்க இ-சேவை மையங்கள் ஆங்காங்கு திறக்கப்பட்டன.
அரசிடமிருந்து குடிமக்களுக்கு (Govenment to citizen-G2C) என்ற இந்த முயற்சி தற்போது பரவலாகியிருக்கிறது. அநேகமாக அனைத்து வரிகளையும் செலுத்துவது, வருமான வரி போன்ற வரவு-செலவுக் கணக்குகளை சமர்ப்பிப்பது,  கூடுதலாகக் கட்டிய தொகையைப் பெறுவது எல்லாமே இன்று சாத்தியமாகியிருக்கிறது. இப்படி இணையவழி ஆட்சியைப் பரவலாக்க பல முயற்சிகள் உதவினாலும் கூட, இந்தத் துறையில்  முன்னேற்றம் போதுமான வேகத்தில் நடைபெறவில்லை என்பதும் உண்மை.
பொதுமக்கள் உடல்நலன், நிலம் சம்பந்தமான ஆவணங்கள் போன்ற மற்ற துறைகளில் இணையத்திலிருந்து சில படிவங்களை தரவிறக்கம் செய்துகொள்ள உதவுவதோடு செயல்பாடு நின்றுபோனது. ஆதார் கார்டு மூலம் ஒருவரது அடையாளத்தை இணையத்திலேயே சரிபார்க்க முடியும் என்ற போதிலும் கூட, பல அரசு அலுவலகங்கள் இன்னமும் அச்சடிக்கப்பட்ட படிவங்களும் கையெழுத்துகளும் தேவை என வற்புறுத்துகின்றன. அதனால்தானே என்னவோ ஐ.நா. வெளியிடும் அரசு இ-சேவை வளர்ச்சி பற்றிய குறியீட்டில் (EGDI) இந்தியா பின்தங்கியே இருக்கிறது. இந்த ஆண்டில் உலக சராசரி 0.55 ஆக இருக்கையில், நாம் வாங்கியிருக்கும் குறியீடு சிறிது கூடுதலாக 0.5669 மட்டுமே. 0.9150 வாங்கி டென்மார்க் உலகில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆசியாவை எடுத்துக் கொண்டால் தென்கொரியா 0.9010 எடுத்து முன்னணியில் உள்ளது. இரான் இந்தியாவை விடக் கூடுதலாக எடுத்திருக்கிறது(0.6083). சார்க் நாடுகளை எடுத்துக் கொண்டால் இலங்கை நமக்கு மேலாக இருக்கிறது.
ஆனால் இ-பங்கேற்பு குறியீட்டில் (EPI)  இந்தியா நன்கு செயல்பட்டு வருகிறது. 2016-ல் 27-வது இடத்தில் இருந்த நாம் 2018-ல் 15-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறோம். இ-தகவல், இ-கலந்தறிதல், இ-முடிவெடுத்தல் ஆகிய அம்சங்களை ஆய்வு செய்து இந்தக் குறியீடு வழங்கப்படுகிறது. இணையத்தில் அரசு அதிகமான தகவல்களை வெளியிடுகிறது, அத்தகவல்கள் அதிகமான மக்களைச் சென்றடைகின்றன என்பது இதிலிருந்து புலனாகிறது. ஆனால் இணையப் பயன்பாடு மூலம் மக்களுக்கு இ-சேவை பரவலாகக் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்துவதற்குக் காரணம், அப்படிப்பட்ட  சேவைகள் வழியாகவே  வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் குறைக்க முடியும் என்ற காரணத்தினால்தான். நமது வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் எந்த மக்களை இலக்காகக் கொள்ள வேண்டுமோ அவர்களைப் போய்ச் சேருவதில்லை என்பது நாம் அறிந்த செய்திதான். அதற்கு லஞ்ச ஊழல் முக்கியமான காரணம் என்ற போதிலும் அரசின் இ-சேவை மையங்கள் திறனுடன் செயல்பட்டு அடித்தட்டு மக்களுக்குத் தேவையான சேவைகளை அவர்களிடம் கொண்டு சேர்க்காததும் ஒரு காரணம்தான்.
(உதவிய கட்டுரை ; ஜூலை 29 திதியிட்ட ஆங்கில இந்து நாளிதழின் காலம்விட்த் பகுதியில் பிசினஸ்லைன் ஆசிரியர் ராகவன் சீனிவாசன் எழுதியது)

News

Read Previous

எம்மை மகிழ்விப்பாய்!

Read Next

தமிழ் தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *