அண்ணனை நம்பி ஏமாந்த தம்பி-ஒப்புதல் வாக்குமூலம்!

Vinkmag ad

அண்ணனை நம்பி ஏமாந்த தம்பி-ஒப்புதல் வாக்குமூலம்!

( டாக்டர் ஏ.பீ.  முகமது  அலி,ஐ.பீ.எஎஸ் (ஓ)

 

பல்வேறு மதப் பிரிவுகளை உள்ளடக்கிய, எண்ணெய் வளமிக்க ஈராக்கினை இரும்புக்கரம் கொண்டும், மக்கள் நலன் போற்றியும் அரசாண்ட ஜனாதிபதி சதாம் ஹுசைன் ஆவார். மேற்காசியா, அரேபியா, ஆப்ரிக்கா கண்டங்களின் எண்ணெய் வளத்தினை அட்டைபோன்று உறிஞ்சி எடுக்கும் ஆற்றல் கொண்ட மேலை நாடுகளின் கொட்டத்தினனை அடக்க நினைத்த சதாம் ஹுசைன் அமெரிக்க டாலருக்கு இணையாக ஈராக் நாணயத்தில் வர்த்தகம் செய்யலாம் என ஒரு அறிவிப்பு அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கு விடுக்கும் சவாலாக  அந்த நாடு எடுத்துக் கொண்டது.

பல்வேறு அரசுகளை தன்னுடைய சி.ஐ.ஏ. மூலம் கவிழ்த்த அமெரிக்க அரசு சதாம் ஹுசைனின் அரசனையும் கைப்பற்ற தொடுக்கப் பட்ட போர்தான் 2003 ஆம் ஆண்டின் ஈராக் போராகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அனைத்து நாடுகளின் சபைதான் ஐ.நா.சபையாகும் என்று உங்களுக்குத் தெரியும். ஒரு நாட்டில் அணு ஆயுதமோ அல்லது மனிதக்கொல்லி ஆய்தமோ இருக்கின்றதா என்று ஆய்வு செய்ய அணு சோதனை குழு ஐநா சபையிலே இருக்கின்றது. அந்தக் குழுவும் பலதடவை ஈராக் சென்று அங்கே அதுபோன்ற ஆயுதங்கள் இல்லை என அறிவித்தது. ஆனால் அந்த அறிக்கையினையும் நம்பாது ஒரு ரகசிய அறிக்கையினை போலியாக அறிவித்து அதனை இங்கிலாந்து அரசின் பிரதமர் டோனி பிளேயர் பார்வைக்கும் அவருடைய மந்திரி கார்டன் பிரவுன் ஆகியோருக்கும்   2002ம் ஆண்டு அனுப்பியது.

அந்த அறிக்கையில், ‘ஈராக் மனிதக் கொல்லி ஆயுதம் வைத்திருப்பதாகவும், அதனை வைத்து 45 நிமிடத்திற்குள் இங்கிலாந்தினை தாக்க முடியும் என்று கூறியது. அது மட்டுமல்லாமல் அந்த ஆயுதம் இருக்கும் இடத்தினையும் கோடிட்டுக் காட்டியது. இருட்டிலே அலையும் குருட்டுப் பூனையினைப் பிடிக்க அமெரிக்க ஜனாதிபதி புஷுடன் சேர்ந்து டோனி பிளேயரும் தயாராகினர். ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க தகுந்த காரணங்களுடன் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அனுமதி பெற்றுதான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அமெரிக்காவும், பிரிட்டனும் தன்னிச்சயாக 2003ம் ஆண்டு போர் தொடுத்தது.

உங்களுக்கெல்லாம் தெரியும் அதன் பின் விளைவுகள். ஈராக்கில் அணு மற்றும் மனிதக் கொல்லி ஆயுதம் இல்லையென்று தெரிந்தும் ஈராக்கினை கைப்பற்றி, ஒரு நாட்டின் ஜனாதிபதியினை சிறைப்பிடித்ததோடு மட்டுமல்லாமல் அவரை பரிசோதிக்கின்றோம் என்று தலையையும் பல்லையும் சோதனை செய்து, ஷியா பொம்மை அரசினை நிறுவி, சதாம் ஹுசைனுக்கு தூக்குத் தண்டனையும் நிறைவேற்றியது. ஆனால் அங்கே நிலையான ஆட்சியினை நிறுவமுடிந்ததா என்றால் இல்லையென்றே சொல்லலாம். குண்டுகள் வெடிக்காத, மக்கள் செத்து மடியா, சொத்துக்கள் அழிவினை அறியா நாளிருக்கின்றதா என்றால் இல்லையென்றே சொல்லலாம். அங்கே வாழும் சுன்னி, ஷியா மற்றும் குர்திஸ்தான் மக்கள் ஒற்றுமையுடன் வாழத்தான் முடிந்ததா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இல்லை, அமெரிக்கா ராணுவ துணையில்லாமல், ஈரான் ஷியா அரசு ராணுவ துணையில்லாமல் ஆட்சி தொடரமுடிகிறதா  என்றால் அதுவும் முடியவில்லை. வளமான நாடு சின்னாபின்னமாகியது தான் போர் தொடுத்ததின் பின் விளைவுகளாகும்.

அமெரிக்க பொய்யான உளவுத்துறை தகவலை நம்பி எந்தளவிற்கு ஏமாற்றப் பட்டோம் என்று டோனி பிளேயர் அரசவையில் மந்திரியாக இருந்தவரும், அவர் பதவி விலகிய பின்பு பிரிட்டிஷ் பிரதமராக ஆன பிரௌன் கார்டன் நேற்று பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்கும்போது, ‘அமெரிக்காவின்  ரகசிய அறிக்கையில் ஈராக்கில் எந்த வித அணு ஆயுதமோ, மனிதக்கொல்லி ஆய்தமோ இல்லை’ என்று 2002ம் ஆண்டே தெரிந்திருந்தும், அதனை மறைத்து பொய்யான தகவலினை பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி அந்த நாட்டின் படையினரையும் ஈராக் போரில் ஈடுபடுத்திவிட்டது. அமெரிக்காவின் பொய்யான தகவலினை நம்பி மோசம் போய் விட்டோம் என்று புலம்பியுள்ளார்.

ஆனால் ஈராக் போரினால் ஏற்பட்ட மனித இழப்பையோ, பொருள் அழிவினையோ, பொது அமைதியையோ, நிலையான அரசையோ ஏற்படுத்தமுடிந்ததா இல்லையே! வில்லிலிருந்து புறப்பட்ட அம்பையோ, நாவிலிருந்து வீசிய சொல்லையோ திரும்பப்பெற முடியுமா அதுபோன்று தான் விலைமதிக்க முடியா மாவீரன், தூக்கு மேடை ஏறிய போதும் புன்னகையுடன் திருக்குரானை கையில் இறுகப்பிடித்து. லிபியா நாட்டின் மாவீரன் உமர் முக்தார் போன்று உயிர் விட்ட சதாம் ஹுசைன் உயிரினை ஜார்ஜ் புஸோ, டோனி பிளேயரோ, புரௌன் கார்டானோ பெறமுடியாது. ஆனால் அந்த மாவீரர்கள் புகழ் உலக வரலாற்றில், இஸ்லாமிய வரலாற்று புத்தகத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படுவது காலத்தின் கட்டாயமே என்றால் மிகையாகுமா!

 

News

Read Previous

குறைவாக சிரித்து அதிகமாக அழுவோம்

Read Next

மரண வாயிலிருந்து தப்பித்த வங்க சிங்கமும்-முஸ்லிம்கள் துணையும்!

Leave a Reply

Your email address will not be published.