தாய்
தாயுடையோர் மனமுவந்து அவர்களுக்கு பணிவிடை செய்யுங்கள்!
“ஒவ்வொரு பிள்ளைக்கும் சொர்க்கம் என்பது அவரது தாயின் காலடியில் என பெருமானார் ரசூலே கரீம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்”
இங்கே தாயின் காலடியில் சொர்க்கம் என்பது, தாயின் திருப்தியும் பிரியமும் துஆவும் என்பதாக பொருள் கொள்ள வேண்டும்.
எந்த பிள்ளைக்காக அவரது தாய் அல்லாஹ்விடம் மனமுருகி துஆ செய்கிறாரோ? அந்த தாயின் துஆவினால் அந்த பிள்ளைக்கு அல்லாஹ் சுவனத்தை உறுதிப்படுத்துகிறான்.
தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளோ…நம் தாய் மீண்டும் உயிரோடு வரமாட்டார்களா? அவர்களுக்கு நிறைய பணிவிடை செய்யலாமேனு? ஆசைப்படுகின்றனர். காரணம், தாயின் இழப்புக்கு பின்னர் தான் அவர்களின் அருமை புரிகிறது.
தாய் உள்ள பிள்ளைகளே! முடிந்தவரை உங்கள் தாய் மற்றும் தகப்பனை நன்றாக கவனியுங்கள்,அவர்களுக்கான பணிவிடைகளை முகம் சுளிக்காமல் செய்யுங்கள்.
தாய் மீது அன்பு கொண்ட ஒரு மகன் தற்போது தனது தாய் நோயுண்டு இருக்கும் நிலையில், தாயின் உடல் நிலையை எண்ணி தினமும் வருத்தமும்,வேதனையும் கொண்டு தாயின் பாசத்தை உணர்த்தி வருகிறார்.
தன் தாய் தன்னை விட்டும் பிரிந்து விடுவாரோ? என்ற பரிதவிப்பில் யா அல்லாஹ்! எனது தாய்க்கு நீண்ட ஆயுளை கொடு அதுவும் நோயற்ற நிலையில் கொடு என்னும் துஆவை தொடர்ந்து கேட்டு வரும் மகனுக்கு தான் அந்த தாய் படும் அவஸ்தை புரியும்.
தாயுள்ளவர்கள் தயவு செய்து அவர்களை எடுத்தெறிந்து பேசி விடாதீர்கள்; அன்போடும்,கனிவோடும் அவர்களிடம் உரையாடுங்கள்.
தனது தாயின் கபுருக்கு சென்று அவர்களின் பாசத்துக்கு ஏங்கிய பெருமானார்(ஸல்) அவர்களுக்கு தான், ஒரு தாயின் பிரிவு எத்தனை வருத்தமென்பது புரியும்.
தாயிழந்த என்னைப் போன்ற பிள்ளைகள் இன்றும் கூட தாயின் பிரிவை தாங்க முடியாமல் தினமும் இரவு நேரத்தில் அழுது கொண்டிருக்கிறோம்; அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்பதையும் ஒரு பணிவிடையாக கருதுகிறோம்.
தாய் இருந்தும் நோய்வாய்ப்பட்டு அவஸ்தைப்படும் தாயை நினைத்து வருந்தும் பிள்ளைகளுக்கு யா அல்லாஹ்! பொறுமையை வழங்குவாயாக; அவர்களின் தாயார்களுக்கு நோயை குணப்படுத்தி வைப்பாயாக; நீடித்த ஆயுளை கொடுப்பாயாக!
பிள்ளைகளை பொருந்திக் கொண்ட தாய்மார்களாகவும், தாய்மார்களைப் பொருந்திக் கொண்ட பிள்ளைகளாகவும் வாழும் நசீபை எங்கள் எல்லோருக்கும் வழங்கிடுவாயாக!
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.
(05.12.2019)