ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளில் சமுதாய மக்கள் அதிகம் இடம் பெற வேண்டும் ! தோப்புத்துறை ஜமாஅத் மன்றத்தின் தலைவர் சிறப்பு பேட்டி !!
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளில் சமுதாய மக்கள் அதிகம் இடம் பெற வேண்டும் !
தோப்புத்துறை ஜமாஅத் மன்றத்தின் தலைவர் சிறப்பு பேட்டி !!
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளில் சமுதாய மக்கள் அதிகம் இடம் பெற வேண்டும் !
தோப்புத்துறை ஜமாஅத் மன்றத்தின் தலைவர் சிறப்பு பேட்டி !!
துபாயில் நடந்த தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 04.03.2016 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தோப்புத்துறை ஜமாஅத் மன்றத்தின் தலைவர் ஜனாப் எம். ஜபருல்லா கான் வந்தார்.
சமுதாயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அவரை முதுகுளத்தூர்.காம் ( www.mudukulathur.com ) இணையதளத்தின் சார்பில் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் பேசப்பட்ட விஷயங்கள் வருமாறு :
தோப்புத்துறையில் ஆறு பள்ளிகளைச் சேர்ந்த ஜமாஅத் மன்றத்தின் தலைவராக ஜபருல்லா கான் இருந்து வருகிறார். இந்த பதவியில் ஏற்கனவே 2009 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலும் அதன் பின்னர் இரண்டாவது முறையாக 2015 முதல் 2016 வரையிலும் இந்த பதவியை வகித்து வருகிறார். அதேபோல் அமீரகத்துக்கு வருவதும் இது இரண்டாவது முறையாகும் என குறிப்பிட்டார்.
அமீரகத்தில் தோப்புத்துறையைச் சேர்ந்த சுமார் 300 முதல் 350 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்த துபாயில் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தை ஏற்படுத்தி ஊருக்கு தேவையான பல்வேறு நல்ல காரியங்களில் ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். அமீரகத்துக்கு பிழைப்பு தேடி வந்தாலும் ஊரை நினைவு கூர்ந்து அவர்கள் இத்தகைய சிறப்பு மிகு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் மேற்கொண்ட திட்டங்களில் முக்கியமாக கருதப்படுவது தோப்புத்துறையில் 300 ஆண்டுகள் பழமையான பெரிய பள்ளிவாசலை புதிய பொலிவுடன் கூடிய பள்ளிவாசலாக கடந்த 2010-ஆம் ஆண்டு ஏற்படுத்தி கொடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக தோப்புத்துறையில் புனித திருக்குர்ஆன் விருது வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் தழுவிய அளவில் நடைபெற இருக்கிறது. இந்த புனித திருக்குர்ஆன் கிராஅத் போட்டி மற்றும் விருது 2016 வருகின்ற மே மாதம் (May—-28&29-5-2016) நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்பவர்கள் தமிழகத்தின் ஐந்து மண்டலங்களில் தேர்வு செய்யப்படுபவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இந்த போட்டிகளில் வெற்றி பெரும் மூன்று போட்டியாளர்களுக்கு
முதல் பரிசு ₹ 1,00,000
இரண்டாம் பரிசு ₹ 50,000
மூன்றாம் பரிசு ₹25,000
ஆறுதல் பரிசு ₹5,000 (12 நபர் ) ஆகிய பரிசுகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டியின் மூலம் மாணவர்கள் திருக்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதுவதற்குரிய விழிப்புணர்வு ஏற்படும். இது ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும். இது தமிழக அளவில் நடைபெறும் ஒரு முக்கியமான போட்டியாகும். இதன் மூலம் மார்க்கப் பணியில் தோப்புத்துறை ஒரு முக்கிய இடத்தை பெறும். இந்த பணிகள் அனைத்துக்கும் துபாய் தோப்புத்துறை சங்கமே முழு பொறுப்பையும் எடுத்து நடத்துகிறது.
மேலும் துபாய் சங்கத்தின் உதவியுடன் அன்னை பாத்திமா அரபிக் கல்லூரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
தோப்புத்துறையில் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வந்தாலும் அனைவரும் ஜமாஅத்தின் கீழ் ஒருங்கிணைந்து ஒரு குடையின் கீழ் செயல்பட்டு வருகின்றனர். அனைவரும் மனதால் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதில் வேறுபாடுகளுக்கு இடமில்லை என்பதை நிரூபித்து வருகின்றனர்.
தனது பதவிக் காலத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் சமுதாய மக்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும், பலர் மருத்துவத்துறையிலும், பொறியியல் துறையிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
தற்போது தோப்புத்துறையைச் சேர்ந்த ஆறு பெண்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். கல்வியின் மூலமே சமுதாயம் மறுமலர்ச்சி பெற முடியும் என்பதில் எமது ஊர் மக்கள் உறுதியாக இருந்து வருவதே இதற்கு காரணம் என்றார்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமீரகத்து வந்த தோப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் உழைப்பால் உயர்ந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் குறைந்த கல்வியுடன் வந்தாலும், தற்போது அமீரகம் வருபவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று வந்து உயர் நிறுவனங்களில் பணிபுரிந்து வருவது எமது ஊருக்கு பெருமையாக இருந்து வருகிறது என குறிப்பிட்டார்.
எனினும் நமது சமுதாய மக்கள் குறிப்பாக தோப்புத்துறையை சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அரசுப் பதவிகளை அலங்கரிக்க வேண்டும் என்பதே தனது ஆசை. அதற்காக கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஊரில் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு நல்ல பலனும் இருந்து வருகிறது.
இது மட்டுமல்லாமல் மார்க்க கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி, மருத்துவ முகாம் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
நல்ல முறையில் படித்து வருபவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி அவர்கள் கல்வியில் உயர்நிலையை அடைய கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக பைத்துல்மால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. எமது ஊரில் ஏழையே இல்லாத நிலையை உருவாக்கும் பணி இந்த பைத்துல்மால் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் தோப்புத்துறையைச் சேர்ந்த சுமார் 100முதல் 150பேர் வரை பணிபுரிந்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்த சிங்கப்பூரில் தோப்புத்துறை முஸ்லிம்சங்கத்தை ஏற்படுத்தி ஊருக்கு தேவையான பல்வேறு நல்ல காரியங்களில் ஈடுபடுத்திகொண்டுள்ளனர் .பெரும்பாலானோர் சிங்கப்பூர் குடிமகனாக இருப்பதால் அவர்களுக்குசொந்தமான உதவிகளை அவர்களே செய்துகொள்கின்றனர் .
சிங்கப்பூரில் உள்ள தோப்புத்துறை சங்கத்தின் சார்பில் மருத்துவமனை ஏற்படுத்தும் திட்டம் ஒன்றை கொடுத்துள்ளனர். அதற்கான விவர அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
தோப்புத்துறையில் சுமார் 850 வீடுகள் உள்ளன. அவற்றில் நம்மவர்கள் சுமார் 3,500 பேர் வசித்து வருகின்றனர். மிகவும் அத்தியாவசிய மருத்துவ தேவைக்காக வெளியூர் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த மருத்துவமனையின் தேவை முக்கியமாக இருந்து வருகிறது.
இளைஞர்கள் நமது சமுதாயத்தின் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இந்த பணிகளில் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். துபாய் சங்கத்தின் செயல்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பு சிறப்புற இருந்து வருவதையும் நினைவு கூர்ந்தார்.
இந்த சந்திப்பின் போது M.J.அபுல் ஹசன், A.சகாபுதீன் எ (சுபா) , M.சாகுல் ஹமீது எ ( சேட்டு ) , M.J,அவுலியாமுகம்மது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்பு எண் : எம். ஜபருல்லா கான் – தோப்புத்துறை – 98 425 50845